அமைச்சர் பற்றி அவதூறு- திமுக பிரமுகர் கைது
1 min read
15.3.2020
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி ரோட்டை சேர்ந்தவர் முருகன் (50). இவர் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்புவதாக அதே பகுதியை சேர்ந்த ராமநாதபுரம் அதிமுக மாணவரணி பகுதி செயலாளர் கவுதம் (24) என்பவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இதன் பேரில் ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்,ஐ ஜெசீஸ் ஆகியோர் போலீசாருடன் 14ம் தேதி நள்ளிரவு முருகன் வீட்டுக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் 15ம் தேதி காலை அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த திமுகவினர் ராமநாதபுரம் காவல் நிலையம் முன் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.