சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை -தாய், கள்ளக்காதலன் மீது வழக்கு
1 min read
15.3.2020
மதுரை, பீபீகுளம், காமராஜர் தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகள் முருகேஸ்வரி (எ) ராதா. இவரது தங்கை சுந்தரவள்ளி, தம்பி முத்துமாரி. முருகேஸ்வரி வேல்முருகன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் விவாகரத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
முருகேஸ்வரி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தல்லாகுளம் பகுதியில் உள்ள அழகு சாதனப்பொருட்கள் விற்பனை கடையில் முருகேஸ்வரி வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடையில் வேலை பார்க்கும் சுனில்குமாருக்கும், முருகேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அவரது தம்பி முத்துமாரி கண்டித்துள்ளார்.
கடந்த 10ம் தேதி சிறுமி அழுது கொண்டே சுந்தரவள்ளி வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து அவர் கேட்டபோது, சுனில்குமார் மற்றும் அவரது நண்பர் சாகுல்ஹமீது ஆகியோர் தன்னை பிடித்துக் கொண்டு கத்தியை சூடு செய்து, தனது இடது உள்ளங்காலில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சகோதரி முருகேஸ்வரியிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் சுந்தரவள்ளி கொடுத்த புகாரின்பேரில், சிறுமியின் தாய் முருகேஸ்வரி, சுனில்குமார், சாகுல்ஹமீது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.