நெல்லையில் விவசாயி அடித்துக்கொலை
1 min read
நெல்லை வண்ணார்பேட்டை சாலைத்தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி (34). விவசாயி. இவர் பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவி லதா மற்றும் இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அண்ணாமலை (35). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடைபாதை தகராறு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலும் அண்ணாமலையின் ஆடுகள் அவ்வப்போது முப்பிடாதி வீட்டிற்குள் சென்று விடும். இந்த காரணங்களுக்காக இருவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் 19ம் தேதி மாலை முப்பிடாதி வீட்டில் காபி குடித்துக் காெண்டிருந்தார். அப்போது அண்ணாமலைக்கு சொந்தமான ஆடுகள் முப்பிடாதியின் வீட்டிற்குள் சென்றது. இதனை கண்ட முப்பிடாதி ஆடுகளை விரட்டி அடித்து விட்டு அண்ணாமலையிடம் ‘உனது ஆடுகள் எனது வீட்டிற்குள் அடிக்கடி வந்து செல்கிறது. நானும் அது குறித்து உன்னிடம் கூறி விட்டேன். நீ அதனை பொருட்படுத்தவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அண்ணாமலை அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் முப்பிடாதியை அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய முப்பிடாதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். தகவலறிந்து போலீஸ் உதவி கமிஷனர்கள் நெல்லை சதீஷ்குமார், பெரியசாமி, பாளை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்ஐ மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி முப்பிடாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளை. போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.