கள்ளக்காதலை கண்டித்த மாமனார் கொலை -கணவரை தூண்டிவிட்டு மனைவி வெறிச்செயல்
1 min read
20.3.2020
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அம்மன்குடி தெற்குத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (47). விவசாயி. இவரது அண்ணன் நாகராஜின் மகன் முத்துமாணிக்கம் (37). இவரது மனைவி கலைச்செல்வி (32). கலைச்செல்விக்கும், அதே தெருவைச் சேர்ந்த தினேஷ் (34) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதெரிந்த சின்ன மாமரான அறிவழகன் கலைச்செல்வி மற்றும் தினேசை கண்டித்துள்ளார்.
கள்ளக்காதல் தெரிந்துவிட்டதால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, தினேஷ் ஆகியோர் அறிவழகனை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கலைச்செல்வி தனது கணவரிடம், தன்னை தினேசுடன் இணைத்து சின்ன மாமனார் தவறாக பேசுவதாகவும், அவரை வெட்டிவிட்டு வரும்படி கூறி நாடகமாடி கணவரை தூண்டிவிட்டு அழுதுள்ளார்.
மனைவியை தப்பாக பேசியதால் ஆத்திரமடைந்த முத்துமாணிக்கம் 18ம் தேதி அரிவாளுடன் சித்தப்பா அறிவழகன் வீட்டுக்கு சென்று அவரிடம் தட்டிகேட்டார்.
அப்போது இருவருக்கும் தகராறு முற்றியதில் முத்துமாணிக்கம் அரிவாளால் சித்தப்பாவை சரமாரி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அறிவழகன் அந்த இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அறிவழகனின் மகன் பிரகாஷ் (20) அளித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் டிஎஸ்பி (பொ) நந்தகோபால், இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிந்து கலைச்செல்வி, அவரது கணவர் முத்துமாணிக்கம் மற்றும் கள்ளக்காதலன் தினேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.