கொரோனாவை வைத்து கோடி, கோடியாய் சம்பாதிக்கும் சீனா
1 min read
7.4.2020
கொரோனாவை வைத்து கோடி, கோடியாய் சம்பாதிக்கும் சீனா… மெடிக்கல் சப்ளைஸில் கொட்டும் துட்டு…!
சீனாவின் வுனான் நகரில் தோன்றிய கொரோனா எனும் கொடிய வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை இந்த வைரஸால் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 12 லட்சத்து 73 ஆயிரத்து 794 பேரில் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரத்து 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாஸ்க், வென்டிலேட்டர்கள், கொரோனா பரிசோதனைக் கருவிகள் ஆகியன கிடைக்காமல் வல்லரசு நாடுகளே விழி பிதுங்கி நிற்கின்றன.
தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு வந்துள்ள சீனா, 50 நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
3.86 மில்லியன் மாஸ்க், 37.5 மில்லியன் பாதுகாப்பு உடைகள், 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள், 2.84 மில்லியன் கொரோனா பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை கடந்த மாதம் மார்ச் 1ம் தேதி முதல் 50 நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் சீனா 1.4 மில்லியன் அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான உலக நாடுகளில் மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் மருத்துவ உபகரணங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் சீனா பொருளாதாரம் பல மடங்கு உயரும் என்றாலும், ஸ்பெயின், பிலிப்பைன்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் சீனாவில் மருத்துவ உபகரணங்களின் தரம் குறித்து புகார் எழுப்பியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.