தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை; வானிலை மையம் அறிவிப்பு
1 min read
Thunderstorm in parts of Tamil Nadu; Weather Center Announcement
10/4/2020
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. மாநிலம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. முதலில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்தது. பின்னர் விருதுநகர் உள்பட சில மாவட்டங்களில் மழை கொட்டியது. நேற்று முன்தினம் சென்னை மற்றும் சேலம் பகுதியில் இடியுடன் மழை பெய்தது. நேற்றும் சில பகுதியில் மழை பெய்தது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 10 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
வெப்பசலனம் காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இன்றும் மழை
இந்த நிலையில் அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு:-
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்று) மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடி மழை பெய்யும். இந்த மழை லேசான முதல் மிதமானதாக இருக்கும்.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.