ஒரே மருத்துவமனையில் இருந்தும் தந்தை உடலை பார்க்க முடியாத மகன்
1 min read
13.4.2020
ஒரே மருத்துவமனையில் இருந்தும் தந்தை உடலை பார்க்க முடியாத மகன்
சென்னை: டில்லி சென்று, கொரோனா பாதிப்பில் உயிரிழந்த தந்தையின் உடலை, உடனிருந்த அவரது மகனால் பார்க்க முடியாத சோகம் ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்த, 69 வயது ஆண், தன், 45 வயதான மகனுடன், மார்ச் மாதம் டில்லி சென்றார். அங்கு நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில், இருவரும் பங்கேற்றனர்.
மார்ச், 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், டில்லி நிஜாமுதீன் பகுதியில் தங்கியவர்களை, சுகாதாரக் குழுவினர் மீட்டு, மார்ச் 31-ல், அங்குள்ள தீன் தயாள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது.
இதில், முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஏப்., 7ல், இருவரும் லோக்நாயக் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, தந்தையின் உடல்நிலை மோசமாகி, 9-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
இது, மறுநாள் காலை, அவரது மகனுக்கு தெரிவிக்கப்பட்டது. விருத்தாசலத்தில் உள்ள குடும்பத்தினர் அனுமதியுடன், தந்தையின் உடல் டில்லியில் அடக்கம் செய்யப்பட்டது.
அதேநேரம், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதால், தந்தையின் உடலைக் கூட, அவரது மகனால் பார்க்க முடியவில்லை.
இது குறித்து, மகன் கூறுகையில், ‘உடல்நிலை மோசமாகி, அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட என் தந்தையை, கண்ணாடி வழியாக சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது.
அவர் இறந்த பின்பும், அவரது உடலை காணும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை’ என, கண்ணீர் மல்க தெரிவித்தார். இதற்கிடையில், மகனுக்கு நடந்த இரண்டு மருத்துவ பரிசோதனையிலும், கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. ஆயினும், அவரை தனிமைப்படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.