15 வயது மாணவி கர்ப்பம் -7பேர் கைது
1 min read
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். வயிற்று வலி காரணமாக இவர் 11ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொரோனா நோய் அச்சத்தில் இருந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மாலையில் தப்பி சென்று விட்டார். போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். 13ம் தேதி அந்த மாணவியின் வசிப்பிடம் தெரியவந்தது.
போலீசார் மாணவியிடம் விசாரித்தபோது, ‘‘தன்னை காதலிப்பதாக கூறி பழகியவர்கள் மிரட்டி பலாத்காரம் செய்து விட்டனர். இதனால் கர்ப்பமாகி விட்டேன். அச்சம் காரணமாக என பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டேன். அடிக்கடி வயிற்று வலி வந்தது. இதைத்தொடர்ந்து என் தாயிடம் கூறினேன். மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோதுதான் நான் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்’’ எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்ததாக பீளமேடு துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23), தனசேகர் (24), சிங்காநல்லூரை சேர்ந்த சந்தோஷ் (19) மற்றும் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 4 பேர் என 7 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் 4 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே சிலர் மாணவியை காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். சமீப காலமாக இவரிடம் காதலிப்பதாக கூறி பழகிய நபர்கள் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். குறிப்பாக சிங்காநல்லூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பூங்காவிற்கு இரவு நேரத்தில் மிரட்டி அழைத்து சென்று பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளனர்.
மாணவர் ஒருவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது இந்த மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கார்த்திக், தனசேகர் ஆகியோரும் வீட்டிற்கு மிரட்டி அழைத்து சென்று பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.