ஊரடங்கு: பொதுமக்களுக்கு நிபந்தனையுடன் உதவி வழங்க ஐகோர்ட்டு அனுமதி
1 min read
Curfew: Allows Icord to provide unconditional assistance to the public
16/4/2020
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
உதவி வழங்க தடை
கொரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாமர மக்கள் வேலை இன்றி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால் பலர் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் அரசி, பருப்பு முதலிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க. மற்றும் சில சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் தனியாக பொதுமக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கி வந்தனர்.
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் நேரடியாக மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கக் கூடாது என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதன் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
தி.மு.க. வழக்கு
இதையடுத்து, தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர், சாலையோரங்களில் வசிப்பவர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்டவர்களுக்கு உணவு, மருந்து ஆகிய உதவிகளை வழங்கி வந்தோம். இந்த உதவிகளை வழங்கும் போது அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், கையுறை, முகக்கவசம் அணிந்துதான் உதவிகளை வழங்கினோம்.
ஆன்-லைன் வழியாக வசதியானவர்களுக்கு பொருள்கள் கிடைக்க வசதிகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு ஏழை, எளிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்கும் அரசியல் கட்சி தலைவர்களை தடுக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருருந்தது.
அனுமதி
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து உத்தரவிட்டனர். அவர்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை. 48 மணி நேரத்துக்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு உதவி செய்பவர்கள் நேரடியாக சென்று உணவுப் பொருட்களை வழங்கலாம். அதே நேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் உணவுப் பொருட்களை வழங்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.