June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மதுரை சித்திரை திருவிழா ரத்து; திருக்கல்யாணம் மட்டும் இணை தளத்தில் காண ஏற்பாடு

1 min read

Madurai Chitirai festivel to be canceled ; Thiru Kalyanam can be arranged for viewing on the site only

17/4/2020

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் திருக்கல்யாணம் மட்டும் நடக்கும். அதை பக்தர்கள் இணைய தளம் மூலம் காணலாம்.

சித்திரை திருவிழா

தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது மதுரை சித்திரை திருவிழா. இந்த திருவிழாவின் முக்கியமானது தேரோட்டம், திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் ஆகும்.
இதில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த பக்தர்கள் வருவார்கள். தேரோட்டம் மற்றும் திருக்கல்யாணத்தைக் காண மதுரை மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற (ஏப்ரல்) 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. அதன்பின் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள்.

மே மாதம் 2-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுவதாகவும் 3-ந் தேதி திக்விஜயமும், 4-ந் தேதி திருக்கல்யாணமும், 5-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுவதாக இருந்தது.
அதே நேரம் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக மதுரை அழகர் கோவில் திருவிழாவும் நடக்கும். அதன்படி அழகர் கோவில் திருவிழா மே 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. 7-ந் தேதி அதிகாலை அழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் இறங்குவதாக இருந்தது.
அழகர் மதுரை வந்து மீண்டும் அழகர்கோவில் செல்லும் வரை வழிநெடுக திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

திருவிழா ரத்து

இந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கோவில் திருவிழாக்கள், வழிபாட்டு ஸ்தலங்களின் விழாக்கள் நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரம் பூஜை நடத்தலாம் என்றும் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்றும் அறிவித்து உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
அதேநேரம் மே 4-ந் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் கோவிலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் பங்கேற்க முடியாது. ஆனால் இந்த திருக்கல்யாணத்தை கோவில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும்போது பெண்கள் தங்கள் கழுத்தில் தாலிக் கயிறை புதிதாக போட்டுக்கொள்ளவார்கள்.
இந்த ஆண்டு திருக்கல்யாணம் நடைபெறும் மே 4-ந் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் வீட்டிலேயே புதிய மங்கலநாணை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்றக் கோவில்கள்

மதரை சித்திரை திருவிழா நடைபெறும் நாளில் தென் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதேபோல் பல்வேறு ஊர்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். இந்த ஆண்டு எல்லா திருவிழாக்களும் ரத்து செய்யப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.