மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனது 6 மாடி ஓட்டலை தந்துள்ளார் சோனுசூட்
1 min read
மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனது 6 மாடி ஓட்டலை தந்துள்ளார் சோனுசூட்!
கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். வேலை இழப்பால் வருமானம் இன்றித் தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிதி உதவியும், அரிசி மூட்டைகளும் வழங்கி உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் திரட்டும் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கும் பணத்தை அள்ளி வழங்குகிறார்கள். ஏழைகளுக்கு உணவும் வழங்குகின்றனர்.
இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளார். அவரைத் தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் சோனுசூட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி ஓட்டலை வழங்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மக்கள் உயிரைக் காப்பாற்ற இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் என்னால் இயன்ற உதவியாக இதைச் செய்துள்ளேன்” என்றார்.
சோனுசூட் தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.