ஆஸ்பத்திரியில் அசைவம் தர மறுத்ததால் ஆன்லைனில் பிரியாணி வரவழைத்த கொரோனா நோயாளிகள்
1 min read
Coronary patients brought online by Priyani for refusing to move to hospital
20-5-2020
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அசைவ உணவு தர மறுத்ததால் கொரோனா நோயாளி ஆன் லைன் மூலம் பிரியாணி, தந்தூரி சிக்கனை வரவழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா நோயாளிகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் சேரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரியாணி
கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் சிலர், அசைவ உணவு வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டனர். ஆனால் அப்படி தரமுடியாது என்று டாக்டர்கள் மறுத்துவிட்டனர். மேலும் டாக்டர்கள், புரத சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இது அசைவம் கேட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து 4பேர், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி என்று அசைவ உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, வரவழைத்த சம்பவம் அரங்கேறியது. மருத்துவமனைக்கே பார்சல் வரவே டாக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர் ஒருவர், அரசு மருத்துவமனை கொரோனா வார்டு முன்பு பேக்கிங் பொருட்களோடு நின்றிருந்தார். சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்தபோது, கொரோனா சிகிச்சையில் இருக்கும் 4 பேர் ஆர்டர் செய்தது அம்பலமானது. கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருந்த 4 பேர்தான், தந்தூரி சிக்கன், பிரியாணி, சிக்கன்பிரை கேட்டு ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உணவுகளை எடுத்து வந்த ஆன்லைன் நிறுவன ஊழியருக்கு, அவர்கள் இருப்பது கொரோனா சிகிச்சை வார்டு என்பது தெரியவில்லை. அவரை திருப்பி அனுப்பியதோடு, சம்பந்தப்பட்ட நோயாளிகளையும் எச்சரித்துள்ளோம்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.