தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது
1 min read
DMK Organization secretary RS Bharathi arrested
23-5-2020
சென்னையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
ஆர்.எஸ். பாரதி
சென்னை அன்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதம், 15-ந் தேதி தி.மு.க. இளைஞரணி கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிகள் மற்றும் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சை எழும்பியது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை அடுத்து அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், சென்னையில் ஆலந்தூரில் உள்ள வீட்டில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர்.
கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறும்போது , “நான் கடந்த பிப்ரவரி மாதம்15-ந் தேதி பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. உபகரணங்கள் வாங்கியதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்த ஊழலை புகார் அளித்தேன். அதனால் யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் கல்யாணம் நிற்காது, கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும்” என்றார்.