1 கி.மீ.,தூரம் பறந்து வந்த பாறாங்கல் -சிறுமி தலையில் விழுந்ததால் பலி
1 min read
1 கி.மீ.,தூரம் பறந்து வந்த பாறாங்கல்
சிறுமி தலையில் விழுந்ததால் பலி
27.5.2020
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வையப்பமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி(38). இவரது மனைவி செல்லாயி(32). இவர்களுக்கு நந்தினி(10) என்ற மகளும், செளந்திரராஜன்(5) என்ற மகனும் உள்ளனர். மூர்த்தி குடும்பத்துடன் சேந்தமங்கலம் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான கிரஷரில் வேலை செய்து வருகிறார். கிரஷர் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் குடிசை வீட்டில் தங்கியுள்ளனர். நந்தினி பரமத்திவேலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்கி, 5வது படித்து வந்தாள். கொரோனா ஊரடங்கால், பெற்றோருடன் வீட்டில் இருந்தாள்.
இந்நிலையில், நேற்று காலை மூர்த்தி, மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலை 6 மணியளவில் நந்தினி, தம்பியுடன் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது அவர்களது வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள, நாமக்கல்லை சேர்ந்த கிட்டு என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்துள்ளனர். வெடி வெடித்ததில் பறந்து வந்த பெரிய பாறாங்கல் ஒன்று, நந்தினியின் தலை மீது விழுந்தது. இதில் நந்தினி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுவன் சௌந்திரராஜனுக்கு கை, கால் எலும்பு முறிந்தது.
இதுகுறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சேந்தமங்கலம் போலீசார், படுகாயமடைந்த சௌந்தரராஜனை மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான நந்தினியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று இரவு 8மணிக்கு சம்பவ இடத்துக்கு சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி, கனிம வளத்துறை அதிகாரிகள் வந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.