கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி துவங்கியது
1 min read
27/5/2020
கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி துவங்கியது
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், நெல்லை அபிஷேகப்பட்டியில் செயல்படும் மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 2 அணு உலைகளில் இருந்தும் தமிழகத்தின் பங்காக 925 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதுதவிர கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலை கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. கூடங்குளம் 1, 2 அணு உலைகள் எரிகோல்கள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒரு முறை நிறுத்தப்படும். இது தவிர அவ்வப்போது பழுது பார்க்கும் பணிகளுக்காகவும் நிறுத்தப்படுவது வழக்கம்.
கூடங்குளம் 2வது அணு உலையில் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் மின் உற்பத்தி நடந்து வந்தது. 910 மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வந்த நிலையில், ஜெனரேட்டரில் அதிர்வு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த 21ம் தேதி மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. ரஷ்ய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் இணைந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை பழுது முழுவதுமாக சரிசெய்யப்பட்டு காலை 9.45 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலாவது அணு உலையில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.