தங்கையை கொன்று தற்கொலை நாடகம்
1 min read
நெல்லை அருகே தங்கையை கொன்று தற்கொலை நாடகம்
1.6.2020
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரையை சேர்ந்த ராமலட்சுமிக்கும் (29), தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரு குழந்தைகள். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் இரு வாரங்களாக ராமலட்சுமி பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு ராமலட்சுமியின் தாய் பேச்சியம்மாள் (52) சென்றுவிட்டு மதியம் திரும்பியபோது ராமலட்சுமி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற கங்கைகொண்டான் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாயின் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார், அதே பகுதியில் வசிக்கும் ராமலட்சுமியின் அண்ணன் நயினார் (37), அவரது உறவினர் அணைத்தலையூரை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகியோரிடம் விசாரித்தனர்.
இதில் ராமலட்சுமி கணவனுடன் சேர்ந்த வாழ மறுத்ததால் அவமானம் ஏற்படும் எனக்கருதிய நயினாரும், மணிகண்டனும் வீட்டில் இருந்த ராமலட்சுமியை கழுத்தை நெரித்து தூக்கிட்டு தற்கொலை செய்து காெண்டது போல் நடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.