June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் -பரபரப்பு வாக்குமூலம்

1 min read
The woman who kidnapped the baby

1.6.2020

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மொசலிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ஷெரீப். இவரது மனைவி ரேசினாசுல்தானா. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான ரேசினா பிரசவத்திற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 29ம்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய்-சேய் வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

நேற்று(31ம் தேதி) காலை பர்தா அணிந்து வந்த ஒரு பெண், ரேசினாவிடம் எனது அக்காவுக்கும் இந்த மருத்துவமனையில்தான் குழந்தை பிறந்துள்ளது. அவரிடம் குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன் என்று கூறி தூக்கிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி தங்கவேல் மற்றும் போலீசார், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடத்தப்பட்ட குழந்தை திருப்பத்தூர் தேவாங்கர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது எஸ்பிக்கு தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதே பகுதியை சேர்ந்த நஹினா என்பவரது வீட்டில் இருந்த குழந்தையை மீட்டனர். மேலும் நஹினாவை கைது செய்து விசாரித்தனர்.

போலீசாரிடம் நஹினா அளித்த வாக்குமூலம்: எனக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் என்னை பிரிந்து 2 மகன்களையும் அழைத்துச்சென்றுவிட்டார். பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன் நூர்முகமது என்பவருடன் எனக்கு 2வது திருமணம் நடந்தது. ஆனால் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் எனது கணவர் நூர்முகமது மன வருத்தம் அடைந்தார். இது எனக்கும் வேதனையாக இருந்தது. இதனால் குழந்தையை திருட முடிவு செய்தேன். இதற்காக கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நோட்டமிட்டேன். அப்போது ரேசினாசுல்தானாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிந்தேன். குழந்தை அழகாக இருந்ததால் அதனை கடத்த திட்டமிட்டேன்.

இதையடுத்து தன்னுடன் படித்த பள்ளி தோழி போல் ரேசினா சுல்தானாவிடம் அறிமுகமாகி உருது மொழியில் ஆசையாக அன்பாக பேசினேன். குழந்தையை தூக்கி கொஞ்சினேன். பின்னர் இதே மருத்துவமனையில் பிரசவமாகி உள்ள எனது அக்காவிடம் குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன் எனக்கூறி ரேசினா சுல்தானாவிடம் கூறினேன். ஆனால் அவர் குழந்தையை தர மறுத்தார். தொடர்ந்து  வற்புறுத்தலுக்கு பின் குழந்தையை கொடுத்தார். குழந்தையை வாங்கிய நான், நைசாக வீட்டிற்கு எடுத்த வந்தேன். தகவலறிந்து போலீசார் என்னை தேடினர். இதையடுத்து நான் அழுக்குத்துணி மூட்டையில் குழந்தையை சுற்றி வைத்துவிட்டேன். சோதனையின்போது குழந்தையின் முனகல் சத்தம் கேட்ட போலீசார், குழந்தையை மீட்டு என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு நஹினா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நஹினா வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.