பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் -4பேர் கைது
1 min read
5.6.2020
Four arrested for sexually assaulting womanதஞ்சாவூர்-திருச்சி புதிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி- சானூரபட்டி பிரிவு அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த 1ம் தேதி மதியம் உடலில் காயங்களுடன் சாலையில் கிடந்தார். அப்போது அப்பகுதியில் கொரோனா ஊரடங்கால் நிவாரண கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு திரும்பிய மாதர் சங்கத்தினர் அப்பெண்ணை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி வல்லம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரை சேர்ந்த 27வயது பெண் என்றும், பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களுரில் பெற்றோருடன் வசித்து வருவதுதாகவும் தெரிவித்தார்.
பெங்களூருவில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா என்பவர் மூலம் ஒருவர் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்து தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை எனக்கூறி சேர்த்துவிட்டதாகவும், ஆனால் அங்கே இருந்தவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அப்பெண் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், தன்னை பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியதாலும் அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்குபேர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் ஒரு வாகனத்தில் அழைத்துவந்து சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டதாகவும் இளம்பெண் கூறினார்.
இதையடுத்து, தஞ்சை சரக போலீஸ் டிஐஜி லோகநாதன் உத்தரவின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண் கூறிய தகவல்கள் மற்றும் வாகனத்தின் நிறம் அடிப்படையில் நடத்திய விசாரணையில், இளம்பெண் அடைக்கப்பட்டிருந்த அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்திவருபவர் தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட 4 பேர் மீது வல்லம் அனைத்து மகளிர் போலிசார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இருந்த முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் (49), அவரது மனைவி ராஜம் (49), பிரபாகரன் (63), ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதாகியுள்ள பிரபாகரன் உதவி ஆய்வாளர். ஓய்வு பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் போலீசில் பணியில் இருந்தபோது லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து எவ்வளவு நாளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். எத்தனை பெண்களை சீரழித்தனர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.