புளியங்குடியில் சேலம் வாலிபர் மர்ம சாவு
1 min read
13/6/2020
Death of Salem youth in Puliyankudiசேலத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(35). தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள நாகையா தெருவில் வசித்து வந்தார்.
புளியங்குடி பகுதியில் கடந்த மாதம் நகராட்சி பில் கலெக்டர் மனைவி மற்றும் சகோதரர் குடும்பத்தினர் உள்பட 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணம் அடைந்தனர். இதையொட்டி தொற்று பாதிப்பு ஏற்பட்ட நகராட்சி 1வது வார்டு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கினர்.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசித்துவந்த தினேஷ்குமாரின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். இதையடுத்து நேற்று புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது தினேஷ்குமாரின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது உடல் அழுகிய நிலையில் தினேஷ்குமார் பிணமாக கிடந்தது தெரியவந்தது. துர்நாற்றம் காரணமாக பிணத்தை உடனடியாக அகற்றமுடியவில்லை.
இதையடுத்து நகராட்சி மூலம் தினேஷ்குமார் வீட்டில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.25 ஆயிரம் ரொக்கம், புதிய வாட்ச், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஒரு ஜோடி செருப்பு ஆகியவை இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2வது நாளான இன்று அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்வதில்லை. இதுபோல் தினேஷ்குமார் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் அவர் வெளியூர் சென்றிருக்கலாம் என பொதுமக்கள் கருதியுள்ளனர். கொரோனா தொற்று அதிகம் புளியங்குடியில் காணப்பட்டதால் தினேஷ்குமார் வேலை இல்லாமல் வீட்டில் தான் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் தற்கொலை செய்தாரா அல்லது இயற்கை மரணமா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.