இந்திய பகுதிகளை இணைத்து நேபாளம் வரைபடம்- இந்தியா கண்டனம்
1 min read
Map of Nepal – India condemned
14-6-2020
இந்தியாவின் பகுதிகளை இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.
அண்டை நாடுகளால் பிரச்சினை
இந்தியாவை எதிரிநாடாகவே கொண்டு அரசியல் செய்து வருகிறது பாகிஸ்தான். அவர்களால் இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லையாகத்தான் இருந்து வருகிறது.
அதேபோல் சீனாவும் இந்தியாவின் எல்லைப்பகுதியில் இடையூறு செய்து வருகிறது. வங்காளதேசம் கூட இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்ல முடியாத நிலையில்தான் உள்ளது.
நேபாளம்
ஆனால் இதுவரை நேபாளம் இந்தியாவின் நட்பு நாடாகத்தான் விளங்கு வந்தது. ஆனால் இப்போது அந்த நாடும் நம்மிடம் வாலாட்டத் தொடங்கி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சுலா- லிபுலேக் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த சாலை தங்கள் எல்லைக்குள் வருவதாக நேபாளம் குற்றம்சாட்டியது. புதிய சாலையை திறந்ததற்கு எதிர்ப்பையும் தெரிவித்தது.
வரைபடம்
இந்த நிலையில் நேபாளம் அரசு இந்தியாவின் பகுதிகளான லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகியவற்றை தங்களுடன் இணைத்து புதிய வரைபடத்தை கடந்த மாதம் வெளியிட்டது. நேபாள அரசின் இந்த நடவடிக்கையை இந்தியா கண்டித்தது. இந்த புதிய வரைபடம் தன்னிச்சையானது என்றும், அதற்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது என்றும் இந்தியா கூறியது.
ஆனால் நேபாள அரசோ தாங்கள் வரைந்த வரைபடம் சரியானதுதான் என்றும், இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நேபாள அரசு கூறியது.
இந்தியர் சுட்டுக் கொலை
நேற்று முன்தினம் பீகார் மாநிலத்தின் சீதாமார்கி மாவட்டத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள பன்டிஜங்கி என்ற இடத்தில் நேபாள ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலி ஆனார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். ஒருவரை அவர்கள் பிடித்துச் சென்றனர்.
இந்த நிலையில் 3 இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் நேபாள அரசு திருத்தம் செய்தது. நேபாள நாடாளுமன்ற கீழ்சபை கூட்டத்தில் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று ஒருமனதாக நிறைவேறியது. ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா (நேபாளம்), ராஷ்ட்ரீய பிரஜாதந்திரா ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளும் மசோதாவை ஆதரித்தன.
ஒப்புதல்
இந்த மசோதா பின்னர் மேல்-சபையில் (தேசிய அசெம்ப்ளி) நிறைவேறியதும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்படும்.
நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு ஆதரவாக அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த செயற்கையான பரவலாக்கம் எந்தவித வரலாற்று உண்மையையோ, ஆதாரத்தையோ அடிப்படையாக கொண்டது அல்ல. இதை ஏற்க முடியாது. இது எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தற்போதைய புரிந்துணர்வுக்கு எதிரானது’ என்றார்.
உதவி
நேபாளத்தின் இந்த செயல் இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நட்பு நடாக இருந்து வந்த நேபாளத்தின் உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நேபாளத்திற்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கொரோனா காலத்திலும் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை இந்தியா அனுப்பி வருகிறது.