தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 37 இடங்களில் அகழாய்வு; 3 ஆயிரம் ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு
1 min read
3 millennium old "Nadukkal" near thamiraparani
தாமிரபரணி ஆற்றங்கரையில் 37 இடங்களில் அகழாய்வு: 3 ஆயிரம் ஆண்டு பழமையான நடுகல் கண்டுபிடிப்பு
“உலகின் மூத்த குடி தமிழ்க்குடியே” என்பது ஆண்டாண்டுகளாக நம் நம்பிக்கை என்றபோதும் அதற்கான ஆதாரங்களின் மூலமே வெளிஉலகுக்கு அதை நிலைநாட்ட முடியும். அந்த வகையில் தமிழரின் தொன்மையை நிரூபிக்கும் ஆதாரங்கள் அகழாய்வுகளின் மூலம் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
தமிழ்நாட்டில் கீழடி (சிவகங்கை மாவட்டம்), ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்) ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகள் மூலம் இதுவரை மண்பாண்டங்கள், ஓடுகள், அணிகலன்கள், பாசிமணிகள், மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட எண்ணற்ற ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றின் தொன்மையும் (2,350 ஆண்டு பழமை) அமெரிக்காவில் நடத்தப்படும் அறிவியல் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கீழடி நாகரிகம் வைகை நதிக்கரை நாகரிகமாகவும், ஆதிச்சநல்லூர் நாகரிகம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செழித்தோங்கி இருந்த நாகரிகமாகவும் கருதப்படுகின்றன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் உணர்த்தும் உண்மைகளின் அடிப்படையில், தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டிய 37 இடங்களில் அகழாய்வு நடத்துவதற்கு தமிழக அரசின் தொல்லியல் துறை ஏற்பாடு கெய்துள்ளது. அந்த 37 இடங்களில் சிவகளையும் (தூத்துக்குடி மாவட்டம்) முக்கியமான ஊராகும். ஆனால் இந்த 37-ல் பல இடங்களில் அகழாய்வுக்கு தடையாக வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. சிவகளையிலும் அகழாய்வு நடத்தவேண்டிய இடத்தில் சரல் மண் அள்ளப்பட்டு விட்டதால் ஆய்வுப்பணியில் சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. என்றாலும், சாதகமான இடங்களை கண்டறிந்து அகழாய்வுகளைத் தொடர தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொல்லியல் களமாகும் உழக்குடி
இதற்கு மத்தியில், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள உழக்குடியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஆய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, உழக்குடிக்கு அருகில், மறுகால்தலை சமணர் படுகையை அடுத்திருக்கும் காட்டுப்பகுதியில் 13 அடி உயர நடுகல் ஒன்றை, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வரலாற்று மாணவர் ஆறுமுக மாசாணசுடலை என்பவர் கண்டுபிடித்தார். இதுபற்றி அவர் கொடுத்த தகவலின்பேரில், ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் குழுவினர் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லாக இருக்கலாம் எனத்தெரியவந்தது. இதுபற்றிய அடுத்தகட்ட ஆய்வுக்கு தொல்லியல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதைந்துள்ள பண்டைய நாகரிகத்தை வெளிக்கொணர்வதற்கு மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தொல்லியல்துறை செயல்பாட்டுக்கு தொடர்ந்து உத்தரவுகளை பெற்றுக்கொடுப்பவர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் ஆவார். அவரிடம், உழக்குடி பகுதியில் கிடைத்த நடுகல் பற்றி கேட்டபோது அவர் சொன்னதாவது:-
“இந்த நடுகல் கிடைத்து இருப்பதை, நமது தொன்மையின் முக்கிய ஆதாரமாகக்கருதுகிறேன். மறுகால்தலை சமணர்படுகையில் இருந்து உழக்குடி, கலியாவூர் வரை முதுமக்கள் தாழிகள் பல புதைந்து கிடக்கக்கூடும். ஆகவே, உழக்குடியும் முக்கிய தொல்லியல் களமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிக ஆய்வில் உழக்குடியையும் சேர்த்தால் இன்னும் பல அபூர்வ தகவல்களை அறிய முடியும்.”
இவ்வாறு முத்தாலங்குறிச்சி காமராஜ் குறிப்பிட்டார்.
வைகைக் கரையிலும், தாமிரபரணிக் கரையிலும் தோண்டத்தோண்ட கிடைத்து வரும் புதைபொருள் எச்சங்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன.