சீன எல்லை மோதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் பலி
1 min read
Chinese border clash: 20 Indian soldiers including Tamilan killed
16-6-2020
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா- சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 3 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதில் ஒருவர் ராணுவ அதிகாரி ஆவார்.
20 பேர் வீரர் மரணம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமாக சூழ்நிலை நிலவுகிறது. எல்லை பகுதியில் இரு நாட்டினரும் வீரர்களை குவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை ) இரவு நடந்த மோதலில் 2 வீரர்கள் ஒரு ராணுவ அதிகாரி என 20 இந்திய படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த சண்டையில் சீன துருப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சீன வீரர்கள் 43 பேர் வரை இறந்ததாக அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.
தமிழக வீரர்
இறந்த இந்திய வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவரது பெயர் பழனி. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இந்த மோதலில் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்த வில்லை என்றும் இரு நாட்டு ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும் முதலில் கூறப்படுகிறது. ஆனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வீர மரணம் அடைந்த பழனி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
40 வயதான பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது மோதல் நடந்த லடாக் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
தம்பி பேட்டி
பழனியின் மரணம் குறித்து அவரது தம்பியும் ராணுவ வீரருமான இதயக்கனி கூறியதாவது :-
நேற்று இந்திய-சீன எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் எனது அண்ணன் இறந்துவிட்டதாக லடாக்கில் உள்ள ராணுவ அதிகாரிகள் என்னிடம் செல்போன் மூலம் கூறினார்கள். நான் இப்போது ராஜஸ்தானில் பணியாற்றி வருகிறேன்.
நான் சுமார் 10 நாட்களுக்கு முன்புதான் என் அண்ணனிடம் பேசினேன். அப்போது, அவர் லடாக்கின் நகரில் இருந்து எல்லைப்பகுதிக்கு செல்வதாகவும், அங்கு தொலைத்தொடர்பு வசதி இருக்காது என்பதால் திரும்ப செல்போனில் பேச சில நாட்களாகும் என்றும் தெரிவித்தார்.
நான் ராணுவத்தில் சேர்வதற்கே என் அண்ணன் தான் காரணம். அவரது மறைவு எங்களது குடும்பத்திற்கு பேரிழப்பாகும். எனது அண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
முதல்-அமைச்சர் இரங்கல்
ராணுவ வீரர் பழனியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
“ராணுவ வீரர் பழனி தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் ” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சீனாவிலும் இழப்பு
இந்திய-சினா மோதலில் சீன துருப்புகளுக்கும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது.