சீன எல்லை அருகே கல்வான் ஆற்றின் குறுக்கே பாலம்; இந்திய ராணுவம் சாதனை
1 min read
India army build Bridge on Kalvan river
20-6-2020
சீன எல்லை அருகே கல்வான் ஆற்றின் குறுக்கே இந்திய ராணுவம் புதிய பாலத்தை கட்டி உள்ளது.
இந்திய- சீன எல்லை
இந்திய-சீன எல்லையில் லடாக் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன வீரர்கள் 43 பேர் வரை இறந்ததாக கூறப்படுகிறது.
இந்திய எல்லையில் லடாக் மாநிலம் கல்வான் என்ற இடத்தில்தான் இந்த மோதல் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள கல்வான் ஆறு முக்கியமானது. அந்த நதியின் பெயர்தான் அந்த பகுதிக்கு சூட்டியுள்ளனர்.
அந்த பகுதியில் சில இடங்களை சீனா உரிமை கொண்டாடுவதால் இந்த மோதல் ஏற்பட்டது.
கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கை முழுவதுமாக கைப்பற்றி, இந்தியாவின் எல்லையை, ஷையோக் ஆற்றுடன் நிறுத்த வேண்டும் என்பது தான், சீனாவின் திட்டம். அப்படிச் செய்தால், அங்கிருக்கும் சாலையை சொந்தமாக்கி, தவுலத் பெக் ஓல்டி உடனான இணைப்பை துண்டிக்கலாம். அங்கிருந்து, முர்கோ வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கலாம் என்பதும், சீனாவின் சமீபத்திய ஆக்ரமிப்பு திட்டத்திற்கு முக்கிய காரணம்.
கல்வான் நதியின் குறுக்கே சரியான பாலம் இல்லாமல் இருந்தது. குறுகிய பாதை தான் இருந்தது. அங்கு முகாமிட்டு இருக்கும் ராணுவத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அந்த நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாலம்
தற்போது இந்திய ராணுவம் நதியின் குறுக்கே பாலம் அமைத்துள்ளனர்.
அந்த நதியின் குறுக்கே இருந்த பாதையை அகற்றி, 60 மீட்டர் பாலம் கட்டும் பணி தற்போது முடிவடைந்து உள்ளது.
கல்வான் பகுதியில், இந்திய – சீன ராணுவத்தினரின் மோதலுக்கு இடையிலும் பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று, முடிவடைந்துள்ளது.இதன் மூலம், இந்திய ராணுவம், கல்வான் ஆற்றைக் கடக்க முடியும். அத்துடன், தர்புக் – தவுலத் பெக் ஓல்டி வரையிலான, 255 கி.மீ., சாலையை பாதுகாக்கவும், காரகோரம் கணவாய்க்கு தெற்கே, கடைசியாக உள்ள ராணுவ முகாமுக்கு சுலபமாக செல்லவும் முடியும்.இந்தப் பாலம், ஷையோக் – கல்வான் ஆறுகள் சந்திப்பில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. ராணுவத்தின், 14வது கண்காணிப்பு முகாம் அருகே உள்ள இந்த பகுதியில் தான், சீனா – இந்திய ராணுவத்தினரின் மோதல் நிகழ்ந்தது.
தற்போது, கல்வான் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், இந்திய ராணுவ வாகனங்கள் ஆற்றை கடக்கவும், பிற வழிகளில் சீன ராணுவம் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியும்.