இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர்
1 min read
23.6.2020
A fake sub-inspector who fell in love with a young womanஇளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர், மைத்துனி, மனைவி, மாமனாரிடம் ₹15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் கோர்லகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பைடி ராமச்சந்திரா. இவர் விசாகப்பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்வதுபோல் போலி அடையாள அட்டையை தயார் செய்துள்ளார்.
யூனிபார்ம் அணிந்தபடி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு இளம்பெண்ணை பார்த்த இவர் நட்பாக பழகியுள்ளார். பின்னர் காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த இளம்பெண்ணும் அவர் போலீஸ் என நம்பி காதலித்துள்ளார். அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் 19ம்தேதி ஒரு கோயிலில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் திருமணம் ஆன சில நாட்களுக்கு பிறகு ராமச்சந்திரா வேலைக்கு செல்லவில்லையாம். இதை அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு அவர், அவர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என்றும், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
மேலும் தான் வேலைக்கு செல்ல குரூப்-1 தேர்வு எழுத உள்ளேன். அதற்காக படித்து வருவதாகவும், அதற்கு நிறைய செலவாகும் எனக்கூறி இளம்பெண்ணின் தந்தையிடமிருந்து ₹12.80 லட்சத்தை பெற்றாராம். மேலும் அந்த இளம்பெண்ணின் நகைகளை அவரது பெயரிலேயே அடகு வைத்து ₹ 1 லட்சம் என ரூ.15 லட்சம் வரை பெற்றுள்ளார். இதுதவிர இளம்பெண்ணின் சகோதரியிடம் இருந்தும் ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் கணவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து வாங்கிய பணம் எங்கே என்று கடந்த மாதம் 29ம்தேதி கேட்டுள்ளார். அதற்கு ராமச்சந்திரா முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் கதறி அழுதார்.
இதுகுறித்து காஞ்சரபாளையம் போலீசில் இளம்பெண் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராமச்சந்திராவை தேடி வருகின்றனர்.