கோவை வேளாண் பல்கலை கழகத்தில் 150 உதவி பேராசிரியர்கள் இடமாற்றம்
1 min read
கோவை வேளாண் பல்கலை கழகத்தில்
150 உதவி பேராசிரியர்கள் இடமாற்றம்
150 Assistant Professors Transferred at Coimbatore Agricultural University24.6.2020
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு விருப்பத்தின் பேரில் ஏப்ரல் மாதத்தில் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வேளாண் பல்கலைக்கழம் தற்போது பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், தற்போது உதவி பேராசிரியர்களாக உள்ள 150 பேரை பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
திருச்சியில் இருந்து திண்டிவனத்திற்கும், சிறுகமணிக்கும், மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கும், கோவையில் இருந்து கன்னியாகுமரி வரை என பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட நபர்கள் அடுத்த 7 நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பணியில் இணைய வேண்டும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிட மாற்றம் பேராசிரியர்களின் விருப்பத்தின்பேரில் செய்யவில்லை எனவும், பழிவாங்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கொரோனா காலத்தில் கூண்டோடு பலரை பல்கலைக்கழகம் பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்துள்ளதால், இ-பாஸ் உள்ளிட்ட நடைமுறையினால் பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்த இடங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கூறியதாவது: அரசு விதிமுறையை மீறி கொரோனா காலத்தில் ஏராளமானோருக்கு பணியிட மாறுதல் அளித்துள்ளனர். இது பழிவாங்கும் செயலாக உள்ளது. எங்களின் விருப்பத்திற்கு மாறாக மாறுதல் அளித்துள்ளனர். பட்டியல் இனத்தனவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பணியிட மாற்றம் தொடர்பாக சென்னை, மதுரை நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் கூறுகையில், “பணியிட மாறுதல் விவகாரத்தில் அரசு விதிமுறைகள் மீறவில்லை. அரசின் அறிவுறுத்தலின் பேரில்தான் நடந்துள்ளது. ஐ.சி.ஆர். பணியிடங்களை நிரப்பவும், விருப்பத்தின் பேரில் பணியிட மாற்றம் கேட்டவர்களுக்கும், பரஸ்பர பணியிட மாற்றத்தின் பேரிலும் மற்றும் நிர்வாக காரணத்திற்காகவும் பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.