கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை; தமிழகத்தில் நல்ல பலன்
1 min read
Plasma treatment for corona in Tamil Nadu
6-7-2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியத்திற்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தினமும் 4 ஆயிரத்திற்கு அதிகமான பேர் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் மிதமான பாதிப்பு உள்ளவர்கள் தாமாகவே குணம் அடைந்து விரைவில் வீடு திரும்புகிறார்கள். கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களில் பலர், சில உயிர் காக்கும் மருந்துகள் மூலம் காப்பாற்றப்படுகிறார்கள். சிலருக்கு பிளாஸ்மா தெரபி மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அது என்ன பிளாஸ்மா தெரபி?
நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்தவரின் உடலில் இருக்கும் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொருவரின் உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா தெரபி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இந்தச் சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது.
அதன்படி, ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டு, அதில் இருந்து முழுமையாகக் குணம் அடைந்த ஒருவரின் பிளாஸ்மாவை தானமாகப் பெற்று, கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு செலுத்தி, இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் இதுவரை 40 பேருக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 20 பேருக்கு பிளாஸ்மா தெரபி அளித்ததில், 18 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர்.
இந்தத்தகவலை தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் பிளாஸ்மா தெரபிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டபின், பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
யார்-யார் பிளாஸ்மா தானம் செய்யலாம்?
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கர்ப்பிணிப் பெண்கள் நீங்கலாக மற்றவர்கள் பிளாஸ்மா தானம் செய்யத் தகுதி படைத்தவர்கள் என்கிறார்கள், ரத்தமாற்று சிகிச்சை நிபுணர்கள்.
இதுபற்றிய அவர்களின் விளக்கம் பின் வருமாறு:-
“ஏதாவது ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியாவால் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதில் இருந்து குணம் அடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறைதான் ‘பிளாஸ்மா தெரபி’. தற்போது, கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பரிந்துரைக்கப் படுகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு முழுமையாகக் குணம் அடைந்த ஒருவரின் ரத்தத்தில், அந்த நோய்க்கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும். இந்த ஆன்டிபாடிகள், பிளாஸ்மா மூலமாகத் தொற்றுள்ள ஒருவருக்கு மாற்றம் செய்யப்படும்போது, அவருக்கு நோய்த்தொற்று குணமாக நிறைய வாய்ப்புள்ளது.
அதேநேரம், குழந்தை பெற்ற பெண்களால் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது. ஏனெனில், கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் மனித லுகோசைட் ஆன்டிஜென்களுக்கு (HLA) எதிராக ஆன்டிபாடிகள் உற்பத்தியாகின்றன. கருவில் உருவாகும் குழந்தையின் ரத்த வகைக்கு ஏற்ப இந்த ஆன்டிபாடிகள் அந்தப் பெண்ணின் ரத்தத்தில் உருவாகும். அந்தப் பெண் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்கிறாரோ அத்தனை குழந்தைகளின் ரத்த வகைக்குத் தகுந்தாற்போல வெவ்வேறு வகையான ஆன்டிபாடிகள் உருவாகும். குழந்தை பிறந்த பின்னும் இவை அந்தப் பெண்ணின் ரத்தத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், குழந்தை பெற்ற ஒரு பெண், கொரோனா பாதிப்பிற்குள்ளாகி அதிலிருந்து மீண்டிருக்கும் பட்சத்தில், அவரது உடலில் உருவாகியிருக்கும் ஆன்டிபாடிகளை பிளாஸ்மா வழியாக, தொற்று உள்ள ஒருவருக்கு மாற்றும்போது எச்எல்ஏ ஆன்டிபாடிகளும் சேர்ந்தே செல்லும். இதனால் அரிப்பு, வீக்கம் முதலான தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களின் பிளாஸ்மா, கொரோனா சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
18 முதல் 60 வயது வரை உள்ளவர்களே தானம் செய்யலாம்
கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த ஒருவர், தனக்கு தொற்று குணம் அடைந்து 14 நாட்களுக்குப் பிறகே பிளாஸ்மா தானம் அளிக்க முடியும். அவர்கள், 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பிளாஸ்மா தானம் அளிப்பவர்களின் உடல் எடை 50 கிலோவிற்கும் மேல் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 8-க்கு மேலாகவும், ரத்த அழுத்தம் 140-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
நாள்பட்ட சிறுநீரக, இதய, நுரையீரல் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்களும், புற்றுநோயில் இருந்து மீண்டவர்களும் பிளாஸ்மா தானம் செய்யக் கூடாது.”
இவ்வாறு ரத்தமாற்று சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
–மணிராஜ்.