இந்தியாவில் முதன்முறையாக கொரோனா தடுப்பு மருந்து 18 பேருக்கு செலுத்தி பரிசோதனை
1 min read
For the first time in India, corona vaccine was tested on 18 people
14-7-2020
இந்தியாவின் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி மருந்தான ‘கோவாக்சின்’, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 18 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது.
கொரோனாவுக்கு தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ஆகியவை இணைந்து, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இதனை விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் சாதகமான முடிவுகள் கிடைத்தன.
முதல் கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
18 பேருக்கு
இதற்கான பணிகள் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 18 தன்னார்வலர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
அந்த தன்னார்வலர்கள் அனைவரும் 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட பின், 3 மணி நேரம் அவர்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தனர். அதன்பின் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இனி 14 நாட்களுக்கு பின் அவர்களுக்கு 2-வது டோஸ் போடப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை நடத்த ஐ.சி.எம்.ஆர் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒன்று. முதல்கட்டமாக 2 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிக்க அதன் தயாரிப்பு நிறுவனமாக பாரத் பயோடெக் கூறியுள்ளது.