June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை

1 min read

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை! – அதிர்ச்சி கொடுத்த அரசின் உத்தரவு

Prohibition of jewelry loans in cooperative banks

`தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்க வேண்டாம்’ என்று அரசு தரப்பிலிருந்து அவசர உத்தரவு வந்துள்ளது. இது அடித்தட்டு மற்றும் விவசாய மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின்கீழ் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின்கீழ் அந்தத் துறையின் பதிவாளர் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. ஆனால், இந்த வங்கிகளுக்கான நெறிமுறைகளை வகுப்பது, கட்டுப்பாடுகளை விதிப்பது, வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது போன்ற அனைத்துப் பணிகளையும் நபார்டு வங்கி கவனித்து வருகிறது.

தமிழகத்தில் பல ஆயிரம் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவுச் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேலான தொகையைக் கூட்டுறவு வங்கிகள் கையாண்டுவருகின்றன. மத்திய அரசு, கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது. சில மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அதேபோல் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அமைப்புகளில் அரசியல் தலையீடுகளும் இருப்பதால் வங்கிகளை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்று காரணம் தெரிவித்தது மத்திய அரசு. இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்பும், சில சங்கங்கள் ஆதரவும் தெரிவித்தன.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமே கிராமப்புற விவசாயிகள் வேளாண் கடன் பெற்றுவருகிறார்கள். அதே போல் விவசாயிகளுக்கான நகைக்கடன்களும் குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட வருவதால், கிராமப்புற பகுதிகளில் விவசாயிகளின் உயிர்நாடியாக இந்த கூட்டுறவு வங்கிகள் இருந்துவருகின்றன.

இந்தநிலையில் நேற்றிரவு கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகிகளுக்குத் தலைமையிலிருந்து வாய்மொழி உத்தரவு ஒன்று வந்துள்ளது. அந்த உத்தரவின்படி, இன்று முதல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் ஏதும் வழங்கவேண்டாம். நிறுத்தி வையுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள கணினியில் நகைக்கடன் வழங்குவதற்கான செயலியும் முடக்கப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அரசு ஆணையும் இதுகுறித்து வெளியிடாமல் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இதுகுறித்த விளக்கம் அறிய கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளரை நாம் தொடர்பு கொண்டபோது தொடர்பினை அவர் ஏற்கவில்லை.

கூட்டுறவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “முதல்வர் அலுவலகத்திலிருந்து அவசரமாக இந்த உத்தரவு வந்துள்ளது. எதற்காக நிறுத்தச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. நபார்டு வங்கியின் உத்தரவு இதற்குக் காரணமா என்று அந்த வங்கி தரப்பிலும் பதிலில்லை. ஆனால், விவசாயிகளுக்கான நகைக்கடனை ரத்து செய்யப்போவதாக ஒரு தகவல் வெளியானது.

‘தமிழக அரசு இப்போதுள்ள நிதி நெருக்கடியில் நகைக்கடன் ரத்து செய்ய வாய்ப்பில்லை’ என்று ஏற்கெனவே நிதித்துறை அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்த அரசு தரப்பு முறையாக விளக்கம் தர வேண்டும்” என்கிறார்கள்.

”கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை” என்கிறார்கள்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் பலரும் நகையை அடைமானம் வைக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு வந்து, பணம் பெற முடியாமல் திரும்பிச் செல்லும் பரிதாபம் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நடந்துவருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.