சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தினரிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை
1 min read
15.7.2020
Human Rights Commission inquires into the families of traders killed in Satankulamசாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடம் மனித உரிமை கமிஷன் டிஎஸ்பி குமார் தலைமையிலான குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 10 பேர் மீது சிபிஐ போலீசார், தற்போது கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிபிஐ முறையிட்டதன்பேரில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 3 நாள் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே இச்சம்பவம் நடந்த அன்றே தமிழ்நாடு மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் மனித உரிமை கமிஷன் சென்னை டிஎஸ்பி குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 6.15மணி அளவில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு வந்தனர்.அப்போது அவர்களுடன் தாக்குதல் நடத்திய போலீசாருக்கு எதிராக சாட்சியம் அளித்த காவலர் ரேவதியும் அழைத்து வரப்பட்டிருந்தார். மனித உரிமை கமிஷன் அதிகாரிகள் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து அரைமணி நேரம் நீடித்தது. அதில் அதிகாரிகள், குடும்பத்தினரிடம் ஜெயராஜ், பென்னிக்ஸை கைது செய்தபோது நடந்து கொண்ட விதம், அது தொடர்பாக அவர்களது கோரிக்கை தொடர்பாக போலீசார் கூறிய வார்த்தைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் குழுவினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் நடத்திய கடைகளை பார்வையிட்டனர். அருகில் உள்ள கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 15 நிமிடம் நடந்தது. இதையடுத்து மனித உரிமை கமிஷன் குழுவினர் வந்திருந்த இரு கார்களில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.