கோவில்பட்டி அருகே காரில் ஆயுதங்களுடன் வந்த ரவுடி உள்பட 3 பேர் கைது
1 min read
ஆயுதங்களுடன் கைதானவர்கள்
16.7.2020
கோவில்பட்டி அருகே நள்ளிரவில் காரில் ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோன்பட்டியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் எஸ்.ஐ.க்கள் இசக்கிராஜா, மணிமேகலை மற்றும் 8 போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை மடக்கி சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நெல்லை நோக்கி வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காரில் ஒரு பிஸ்டல், 5 தோட்டாக்கள், 2 வீச்சரிவாள் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரவுடி குமுளி ராஜ்குமார் (38), பாளை அருகே உள்ள படப்பகுறிச்சியைச் சேர்ந்த வினோத் (24), கொக்கிரகுளத்தைச் சேர்ந்த சுரேந்தர் (24) என்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கார் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், குமுளி ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து கிழக்கு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், ஈரோட்டில் இருந்து காரில் நெல்லைக்கு செல்வதாக கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குமுளி ராஜ்குமார் மீது 3 கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்கு, 2 ஆயுத வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன. இதேபோல் வினோத் மீது 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளும், சுரேந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கும் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. காரில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது எதற்காக? என்பது குறித்து 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கோவில்பட்டியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் 3 பேர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.