காஷ்மீரில் குணமான 12 பேருக்கு மீண்டும் கொரோனா
1 min read
Corona back to 12 healed in Kashmir
23-7-2020
காஷ்மீரில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாக 12 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
மீண்டும் கொரோனா
கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் குணம் அடைந்துவிட்டால் அவர்களை மீண்டும் கொரோனா தாக்காது என்று பலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பலரும் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் காஷ்மீரில் 12 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குளிர்பான தொழிற்சாலை
ஜம்மு-காஷ்மீரில் குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஒருவருக்கு கடந்த 1-ந்தேததி கொரோனா உறுதியான நிலையில் உடன் பணிபுரிந்த 15 தொழிலாளர்களின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் கொரோனா உறுதியானதால் கடந்த 1-ந் தேதி 15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் அனைவரும் 5-ந் தேதி இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 17-ந் தேதி மீண்டும் அவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் நெகடிவ் என வந்தது. அதே நாளில், அவர்களது மாதிரிகளை சுகாதார அதிகாரிகள், இரண்டாவது சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.
அன்று மாலையில் இரண்டாவது சோதனை முடிவுகள் வரவே, அதில் 15 தொழிலாளர்களில் 12 பேருக்கு பாசிட்டிவ் என வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அந்த 12 பேரையும் கண்டறிய பணியில் சுகாதாரத்துறை இறங்கியது. அதற்குள்ளாக அவர்களில் சிலர் வேறு வேறு இடங்களுக்கு சென்றதால், அவர்களை தொடர்பு கொண்டு, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்து, கொரோனா பாசிட்டிவ் செய்தியை கூறியுள்ளனர். அவர்கள் 12 பேரும் தற்போது மருத்துவமனையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர்.