சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்த ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலை
1 min read
Government job for Jayaraj’s daughter who died after being attacked by police in Sathankulam
27-7-2020
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் இறந்த வியாபாரி ஜெயராஜின் மகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வேலை வழங்கினார்.
தந்தை, மகன் சாவு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின்போது கடுமையாக தாக்கப்பட்டு இறந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அரசு வேலை
அதன்படி, ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோதனையில் இருந்து மீள்வதற்காக அரசு தனக்கு பணி வழங்கியிருக்கிறது. என் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.