தமிழகத்தில் இன்று கவர்னர் உள்பட 5,875 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
5,875 affected for corona inclouding Governar in Tamil Nadu today
2-8-2020
தமிழகத்தில் இன்று மட்டும் கவர்னர் உள்பட 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடரும் நிலையில் டிஸ்சார்ஜ் ஆவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.
கவர்னருக்கு கொரோனா
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கவர்னர் மாளிகையின் (ராஜ்பவன்) பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து நடந்த பரிசோதனையில் கவர்னரின் உதவியாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் கவர்னர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவரை வீட்டிலேயே தனிமை படுத்திக் கொள்ளுமாறு டாக்டர்கள் கூறினார்கள். வீட்டிற்கே டாக்டர்கள் சென்று பரிசோதிக்க இருக்கிறார்கள்.
98 பேர் சாவு
இன்று ஒரே நாளில் 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர். 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 98 பேர் இறந்துள்ளர். இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு ஆஸ்பத்திரியில் 75 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 23 பேரும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.
இன்று 60,344 மாதிரிகளும், 58,505 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 27,79,062 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 26,77,017 நபருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவுக்கு 56,998 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 12 ஆயிரத்து 790 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 589 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32 ஆயிரத்து 234 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.