தி.மு.க. வில் இருந்து எம்.எல்.ஏ. செல்வம் சஸ்பெண்டு; மு.க.ஸ்டாலின் நடவடிக்கை
1 min read
DMK MLA Selvam Suspend; The action of MK Stalin
5-8-2020
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வத்தை, தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்டு செய்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வம்
ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கு.க.செல்வம். இவர் தி.மு.க., தலைமை நிலைய செயலாளராகவும் இருந்துவந்தார்,
சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க. செயலாளர், ஜெ.அன்பழகன் மறைவுக்கு பின், அவர் வகித்த பதவி தங்களுக்கு கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வமும் அந்த பதவியை எதிர்பார்த்தார். ஆனால், கட்சியில், அவருக்கு ஜூனியரான சிற்றரசுவை அந்த பதவிக்கு கட்சி தலைமை நியமித்தது. உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பரிந்துரை காரணமாக அவர் நியமிக்கப்பட்டராக தெரிகிறது. இது கு.க.செல்வத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாரதீய ஜனதா
இந்த நிலையில், கு.க. செல்வம் டெல்லியில், பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சியில் சேரும் விருப்பம்தெரிவித்தாக கூறப்படுகிறது.
ஆனால், ஒரு எம்.எல்.ஏ. கட்சி மாறினால், கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவரது பதவி பறிபோகும் என்பதால் அவர் பாரதீய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக அவரை சேர்க்கவில்லை.
டெல்லியில் நட்டாவை சந்தித்தது குறித்து கு.க.செல்வம் கூறியதாவது:-
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். என் தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், ‘லிப்ட்’ அமைத்து தரும்படி, ரெயில்வே மந்திரி பியுஷ் கோயலை சந்தித்து கேட்க, டெல்லி வந்தேன். கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர்களை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலை நடத்த, அவர் முன்வர வேண்டும். நான் பாரதீய ஜனதா கட்சியில் இணையவில்லை. நான் பாரதீய ஜனதா தலைவர் நட்டாவை சந்தித்ததற்காக, என் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுத்தால், அதை சந்திக்க தயார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சஸ்பெண்டு
இந்த நிலையில், கு.க.செல்வத்தை, தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்டு செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளும், கு.க.செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
கவலையில்லை
தன்மீதான நடவடிக்கை எடுத்தபின்னர் கு.க.செல்வம் இன்று(புதன்கிழமை) சென்னையில் உள்ள தமிழக பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடி, நட்டா மற்றும் முருகன் ஆகியோருக்கு நன்றி. நான் எம்.எல்.ஏ. என்ற முறையில், அவர்களிடம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு லிப்ட் வசதி கேட்டேன். திமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடவுள் முருகனை பற்றி தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். கட்சியை விட்டு நீக்கினாலும் எனக்கு கவலையில்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.