செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து -தாய், 2 குழந்தைகள் கருகி பலி
1 min read
10.8.2020
Cellphone charger explodes in fire – Mother, 2 children burnt to death
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(60). இவரது மனைவி குப்பம்மாள்(55). இவர்களது மகள் முத்துலட்சுமி(29). இவர்கள் 10 வருடங்களுக்கு முன் கரூர் ராயனூருக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே முத்துலட்சுமிக்கும், கரூர் கல்லுமடையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷித்(3), தக்ஷித்(2) என்ற 2 மகன்கள் இருந்தனர். பாலகிருஷ்ணன் பரமத்தி பகுதியில் பேக்கரி நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் பல இடங்களில் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு ஓடி விட்டார்.
இந்நிலையில் கடனால் சிரமப்பட்டு வந்த முத்துலட்சுமி குழந்தைகளுடன் ராயனூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அப்பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபார கடையில் முத்துலட்சுமி வேலை செய்து வந்தார்.
நேற்று பணப்பிரச்னை தொடர்பாக கருப்பையாவும், குப்பம்மாளும் உறவினரை பார்ப்பதற்காக ராமநாதபுரத்துக்கு சென்றுவிட்டனர். வீட்டில் குழந்தைகளுடன் முத்துலட்சுமி இருந்தார். இரவு குழந்தைகள் அறையில் தூங்கினர். முத்துலட்சுமி ஹாலில், செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அதனருகிலேயே தரையில் பாய் விரித்து படுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து புகை வெளிேயே வந்தது. இதைபார்த்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாந்தோணிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கையில் முற்றிலும் எரிந்த நிலையில் முத்துலட்சுமியும், அருகிலேயே 2 குழந்தைகளும் உடல் கருகி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ஹாலில் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்தன. ஹால் முழுவதும் புகை மூட்டமாக இருந்தது.
செல்போன் சார்ஜர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், அறையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மூச்சு திணறல் ஏற்பட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து ஹாலுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 3 பேரின் சடலங்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.