சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது மேலும் ஒரு தொழிலாளி எஸ்பியிடம் புகார்
1 min read
12.8.2020
Satankulam Inspector, SI another worker on complained to SPசாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பெனிக்ஸ் இரட்டை படுகொலை தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன் உள்ளிட்ட 10 பேர், சிபிசிபிஐ விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் மீது அடுக்கடுக்கான புகார்கள் எஸ்பியிடம் அளிக்கப்பட்டு வருகிறது. பேய்க்குளத்தை சேர்ந்த தொழிலாளி மகேந்திரன் இறப்பு குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் பேய்க்குளத்தை சேர்ந்த சவரத்தொழிலாளி சின்னமணி (37), சாத்தான்குளம் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசார் மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான் பேய்க்குளம் பஜாரில் உள்ள சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். கடந்த மே மாதம் பேய்க்குளத்தில் பஞ். உறுப்பினர் ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த எஸ்ஐ ரகுகணேஷ் தலைமையிலான போலீசார் என்னை கைது செய்து சித்ரவதை செய்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அறிவுரையின் பேரில் என்னை அடித்து காயப்படுத்தினர். விசாரணைக்கு வந்த பெருமாள்குளத்தைச் சேர்ந்த அருள்நாதன் என்பவரிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி என் மீது போலியாக வழக்கு பதிவு செய்தனர். எனவே, என் மீது போலி வழக்கு பதிந்து சித்ரவதை செய்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் சின்னமணி மீது புகார் கொடுத்ததாக கூறப்படும் பெருமாள்குளத்தைச் சேர்ந்த அருள்நாதன், தூத்துக்குடி எஸ்பியிடம் கொடுத்துள்ள மனுவில், ‘நான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஊரில் நடந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு சென்றேன். அங்கு சவரத்தொழிலாளி சின்னமணியை காவல்துறையினர் அடித்து சித்ரவதை செய்ததை பார்த்தேன். அப்போது என்னிடம் 3 வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி விட்டனர். சின்னமணி ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான் அவர் மீது நான் புகார் செய்ததாகவும், அதன் பேரில் சின்னமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிய வந்தது. எனக்கும், சின்னமணிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் போலீசார் திட்டமிட்டு என்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சின்னமணி மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர், இவ்வாறு கூறியுள்ளார்.