17ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் -முதல்வர் அறிவிப்பு
1 min read
14.8.2020
E-pass for all applicants from 17thகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
திருமணம், மரணம் அல்லது மருத்துவ தேவைகள் போன்ற மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக மட்டும் இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது. மேலும், இ பாஸ் மீதான கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்த வேண்டுமென தமிழக மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இ பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இ பாஸ் மீதான சில முக்கிய தளர்வுகளை வெளியிட்டு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ பாஸ் பெற்றுக் கொள்வதற்கு ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், எந்தவித தாமதமும் தடையுமின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.