சாத்தான்குளம் அருகே தந்தை அடித்துக்கொன்ற மகன்கள்
1 min read
17.8.2020
Sons beaten to death by father near Sathankulamதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துக்குடியிருப்பு பிராமணவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (48). எலக்ட்ரீசியனான இவருக்கு செல்வம் (45) என்ற மனைவியும், ஜெகன் (21), சிவா (19) என்ற இரு மகன்களும், வைதேகி(20), முருகேஸ்வரி (14) என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் வைதேகி திருமணமாகி வெளியூரில் உள்ளார். சென்னையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த மகன்கள் ஜெகன், சிவா இருவரும் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்து இங்கு இருந்து வருகின்றனர்.
துரைராஜ் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி அதே ஊரில் உள்ள மற்றொரு வீட்டில் மனைவி செல்வம் தனது மகன்கள், மகளுடன் வசித்து வந்துள்ளார். இருப்பினும் துரைராஜ் மது அருந்தி விட்டு அங்கு வந்தும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு துரைராஜ், மனைவி செல்வத்திடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த துரைராஜ், அரிவாளால் மனைவி, மகன்கள், மகளை தாக்கியுள்ளார். இதனை மகன்கள் தடுத்து தந்தையை எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் செல்வம் நேற்று காலை 9மணி அளவில் அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த துரைராஜ், மனைவி செல்வத்திடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்த அவரது மகன்கள் ஜெகன், சிவா இருவரும் துரைராஜை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் துரைராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உடலில் ரத்தம் வடிந்தது. உடனே மகன்கள் இருவரும் அவரை வீட்டு வராண்டாவில் போட்டு விட்டு வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த துரைராஜை மாலை 4 மணி அளவில் அருகில் உள்ளவர்கள் பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது துரைராஜ் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெர்னார்ட் சேவியர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து துரைராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி (பொறுப்பு) நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குபதிந்து ஜெகன், சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
====