தூத்துக்குடி அருகே குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் வெடிகுண்டு வீசி கொலை
1 min read
Policeman killed in bomb blast near Thoothukudi
18-8-2020
தூத்துக்குடி மாவடத்தில் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
போலீஸ்காரர் பலி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதி முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் மீது குற்றவாளி துரைமுத்து வெடிகுண்டு வீசி உள்ளார். இதில் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் பலியானார். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்து உள்ளார். வெடிகுண்டு வீசியபோது ரவுடி துரைமுத்துவும் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒருவரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி இரங்கல்
போலீஸ்காரர் இறப்புக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் இன்று (18.8.2020), மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர் எனவும், காவல் துறையினரைப் பார்த்த துரைமுத்து மற்றும் அவனது சகோதரன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல்துறையினர் அவர்களைத் துரத்திப் பிடிக்க முற்பட்டனர் எனவும், அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் வந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அரசுப் பணி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
ரூ.50 லட்சம்
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 50 லட்சம் ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.