தேவையான இடங்களில் தடுப்பணைகள்; எடப்பாடி பழனிசாமி தகவல்
1 min read
Dams will be built where needed; Edappadi Palanisamy
20-8-2020
தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்துவருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆலோசனை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:
பொதுமக்கள் நலன் கருதியே இ-பாசில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்லாதீர்.
காய்ச்சல் முகாம்
மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. காய்ச்சல் முகாம்கள் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான்.
தடுப்பணைகள்
குடிமராமத்து பணிகள் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன. தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.