பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தற்கொலை – பணி அழுத்தம் காரணமா?
1 min read
21.8.2020
Policeman commits suicide while on security duty – Is it due to work pressure?பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தற்கொலை – பணி அழுத்தம் காரணமா?
2 நாட்களாக முதல்வர் வருகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் சிறப்பு படை காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் இம்ரான்(23). இவர் 2017-ம் நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்வாகி வேலூர் மாவட்டம் சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை F கம்பெனியில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆன நிலையில் இவரது மனைவி 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
இதைத்தொடர்ந்து, நேற்று கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு கூட்டத்திற்காக வேலூருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். இதற்காக காவலர் இம்ரான் கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். முதல்வர் வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றதையடுத்து காவலர் இம்ரான் மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அறை காதவை திறந்து பார்த்த போது காவலர் இம்ரான் தனது தாயின் புடவையில் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இம்ரானின் தாய் மற்றும் மனைவியின் சத்தம் கேட்ட உறவினர்கள் காவலர் இம்ரானை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இம்ரான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இம்ரானின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பணி அழுத்தம் காரணமாகவே காவலர் இம்ரான் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினரிடம் கேட்ட போது காவலர் இம்ரானுக்கு எந்த வித பணி அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. அவர் கேட்ட விடுமுறை மற்றும் இடமாறூதலையும் உடனே வழங்கியுள்ளோம். அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய ஆள் இல்லை என்றும் ஆகவே இவரது தற்கொலைக்கு பணி அழுத்தம் காரணம் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் காவலர் இமரானின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் கிராமிய காவல் துறையினைர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.