நெல்லையில் நடந்த பயங்கரம் -2 திருநங்கை உள்பட 3 பேர் கொலை
1 min read
கொலை செய்யப்பட்டவர்கள்
22.8.2020
3 killed including 2 transgender people in Nellaiநெல்லையை அடுத்த பேட்டை நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியைச் சேர்ந்தவர் பவானி (28). திருநங்கையான இவரும், முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டியைச் சேர்ந்த பெயின்டர் முருகன் (30) என்பவரும் திருநங்கை காலனியில் கணவன், மனைவியாக வசித்து வந்தனர். இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினர். இதையறிந்த அதேபகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற தங்கவேல் (30) என்பவர் முருகன், பவானிக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் வாங்கினார். ஆனாலும் ரிஷிகேஷ் சொன்னபடி குழந்தையை தத்து எடுத்து கொடுக்காமல் காலம் தாழ்த்தினார்.
அவரிடம் முருகன், பவானி ஆகியோர் குழந்தையை தத்து எடுத்து தாருங்கள் அல்லது பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து கடந்த 19ம்தேதி ரிஷிகேஷ் தனது சொந்த ஊரான சேலத்துக்கு சென்று குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி முருகன், பவானி ஆகியோரை காரில் அழைத்துச் சென்றார். அப்போது பவானி அப்பகுதியைச் சேர்ந்த தனது தோழியான அனுஷ்கா (24) என்ற திருநங்கையையும் தங்களுடன் காரில் அழைத்துச் சென்றார். அதன்பிறகு ரிஷிகேஷ் மட்டும் வீடு திரும்பினார். முருகன், பவானி, அனுஷ்கா ஆகியோர் திரும்பி வரவில்லை. அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற திருநங்கைகள் இதுகுறித்து ரிஷிகேஷிடம் கேட்டபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதற்கிடையில் பவானி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த திருநங்கைகள், முருகன், பவானி, அனுஷ்கா ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி நேற்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் ரிஷிகேஷ், அவரது டிரைவர் செல்லத்துரை என்ற ராஜா (33), பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த பைனான்ஸ் ெதாழில் செய்து வரும் சுனோவின் (29) ஆகிய 3 பேரை பிடித்து சுத்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் எஸ்பி மணிவண்ணன், சேரன்மகாதேவி ஏஎஸ்பி பிரதீப், நெல்லை டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் நடத்திய விசாரணையில் முருகன், பவானி, அனுஷ்கா ஆகியோர் மகாராஜநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டதும், அவர்களது உடல்களை தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி பாளையங்கோட்டை கேடிசிநகர் – கக்கன் நகர் நான்கு வழிச்சாலை அருகே உள்ள பாழடைந்த 2 கிணறுகளில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்கள் நேற்று மாலை மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ரிஷிகேஷ், செல்லத்துரை, சுனோவின் ஆகியோரை ஐகிரவுண்ட் போலீசார் கைது செய்தனர்.

போலீசில் ரிஷிகேஷ் அளித்துள்ள வாக்குமூலம்: சேலத்தில் கேஸ் ஏஜென்ஸி நடத்தி வருகிறேன். எனது மனைவி விவகாரத்து பெற்று சென்றுவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் நெல்லை நரசிங்கநல்லூரைச் சேர்ந்த திருநங்கை ரேணுகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு நான் ஊரில் இருந்து புறப்பட்டு நரசிங்கநல்லூர் வந்து ரேணுகாவுடன் குடும்பம் நடத்தினேன். பின்னர் பாளையங்கோட்டை மகாராஜநகரில் ரூ.12 ஆயிரத்திற்கு வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தோம். அப்போது முருகன், பவானியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக தெரிவித்தனர். அதற்கு நான், குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் வாங்கினேன்.
அப்போது அனுஷ்காவும் தனக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து தர வேண்டும் என்று கூறினார். அதற்கும் நான் ஒப்புக் கொண்டேன். இதற்கிடையில் குழந்தையை தத்து எடுத்து கொடுக்காததால் பணத்தை கேட்டு முருகன், பவானி ஆகியோர் தொந்தரவு செய்தனர். இதுகுறித்து எனது நண்பர் சுனோவினிடம் கூறினேன். அதன்பிறகு அவர்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். அதன்படி கடந்த 19ம்தேதி சேலத்திற்கு சென்று குழந்தையை தத்தெடுத்து வரலாம் என்று கூறி மகாராஜநகரில் உள்ள வீட்டிற்கு வரவழைத்தேன். அங்கு வைத்து 3 பேரும் என்னிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த நான், நண்பர் சுனோவின், செல்லத்துரை ஆகியோர் அனுஷ்காவை கட்டையால் அடித்து கழுத்தை நெரித்துக் கொன்றோம். அப்போது அங்கிருந்த முருகன், எங்களை போலீசில் காட்டிக் கொடுத்து விடுவதாக கூறினார். இதனால் அவரையும், பவானியையும் கழுத்தை நெரித்துக் கொன்றோம்.
பின்னர் 3 பேரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி கேடிசி நகர் – கக்கன் நகர் நான்கு வழிச்சாலையோரம் உள்ள பாழடைந்த கிணறுகளில் வீசி விட்டோம்.
இவ்வாறு ரிஷிகேஷ் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பின் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.