கொரோனா வார்டில் மது குடித்த கைதி -படம் வெளியானதால் அதிர்ச்சி
1 min read
24.8.2020
Corona Ward Drunk Prisoner – Shocked by the release of the photoஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பிரபல ரவுடி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கைவிலங்கோடு மது அருந்தும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சாந்து குப்தா என்னும் ரவுடி ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் முன் ஆஜராகி சிறை செல்லும் முன் சாந்து குப்தாக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரவுடி சாந்து குப்தா அவர் தங்கியிருந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கைவிலங்கோடு மது ஊற்றி குடிப்பதும், அருகே பல வகையான உணவு பொருட்களும் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
கைது செய்யப்பட்ட பிரபல ரவுடிக்கு தடபுடலாக விருந்து என பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கொரோனா வார்டில் மது கொடுத்தது யார் என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.
மேலும் ரவுடி சாந்து குப்தாவின் சர்ச்சை புகைப்படம் குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையின் முடிவில் வெளிவந்த சாந்து குப்தா மது அருந்தும் புகைப்படம் உண்மை என தெரிய வந்ததுள்ளது. மேலும் அவருக்கு விருந்து அளித்தவர்கள் குறித்தான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.