நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
1 min read
2.9.2020
Notice seeking compensation of one crore rupees for Nellai Government Hospitalநெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறையைச் சேர்ந்த 35 வயது ஆண் கடந்த ஜூலை 7ம்தேதி நெல்லை சந்திப்பில் உள்ள மேலவீரராகபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் ஜூலை 8ம்தேதி அவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் 8ம்தேதி கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வீட்டில் ஜூலை 8ம்தேதி முதல் 21ம்தேதி வரை 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்ந்த 4 நாட்களில், அதாவது 12ம்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்ந்த 4 நாட்களில் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் சம்மரி அறிக்கையை பார்த்த போது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவருக்கு 7ம்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 8ம்தேதி முடிவுகள் வெளியான நிலையில், அவர் ஜூலை 3ம்தேதியே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 4 நாட்கள் காய்ச்சல், 4 நாட்கள் சளி இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லையைச் சேர்ந்த வக்கீல் பிரம்மா மூலம் ரூ.ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர், கலெக்டர், சுகாதார துறை செயலாளர், நெல்லை மாநகராட்சி கமிஷனர், மாநகர நல அலுவலர், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
7ம்தேதி பரிசோதனை செய்யப்பட்டு 8ம்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தவருக்கு, 3ம்தேதியே சேர்ந்ததாக ஆவணம் தயார் செய்துள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.