மனோன் மணியம் பல்கலைக்கழக செமஸ்டர் 21-ந் தேதி தொடக்கம்
1 min read
Manon Maniyam University Semester 21st Start
6-9-2020
மனோன்மணியம் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வருகிற 21-ந் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பல்கலைகழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :-
செமஸ்டர் தேர்வு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்திற்கு ஏப்ரல் 2020-ம் ஆண்டிற்கான தேர்வுக்கு உரிய முறையில் விண்ணப்பித்த நடப்பு மற்றும் தனித்தேர்வர்களுக்கு (Regular and Private Students), செப்டம்பர் மாதம் 21-ந் தேதியிலிருந்து பருவ தேர்வுகள்( செமஸ்டர்) நடைபெறவுள்ளது.
முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணக்கர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், இளநிலை கலை மற்றும் இளநிலை வணிகவியல் மாணக்கர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் அவர்கள் பயின்ற கல்லூரியிலேயே தேர்வுகள் நடைபெறும். இறுதிப்பருவ எழுத்துத் தேர்வு எழுத வேண்டிய ஆய்வியல் நிறைஞர் மாணக்கர்களுக்கு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.
தேர்வு மையம்
மாணக்கர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளில் நேரில் வந்து தேர்வு எழுத இயலாத பட்சத்தில், மாணக்கர்கள் வசிக்கும் இருப்பிடங்களின் அருகில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் தேர்வு எழுத ஆவன செய்யப்படும். இப்பல்கலைக்கழக அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்ட வெளி மாவட்டம் / வெளி மாநிலம் / வெளி நாடுகளில் உள்ள மாணக்கர்கள் நேரில் வந்து தேர்வு எழுத இயலாத பட்சத்தில், இணையதளம் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் ஏதேனும் ஒரு தேர்வு மையத்திலோ தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இப்பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட வேறு ஏதேனும் கல்லூரிகளில் தேர்வு எழுத விரும்பும் மாணக்கர்களும், இணையதளம் மூலம் அல்லது வேறு மாவட்ட/மாநில மையங்களில் தேர்வு எழுத விரும்பும் மாணக்கர்களும் தாங்கள் பயின்ற கல்லூரியின் முதல்வரை உடனடியாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரை 10.9.2020-க்கு முன்னர் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்லூரி முதல்வர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் மட்டுமே மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
குறுஞ்செய்தி
ஏப்ரல் 2020-ல் தேர்வு கட்டணம் செலுத்திய இளநிலை இரண்டாம் மற்றும் நான்காம் பருவ மாணவர்களின் தேர்வு முடிவுகளும், முதுநிலை இரண்டாம் பருவ மாணவர்களின் தேர்வு முடிவுகளும் அரசு ஆணை (டி) எண்.111 , நாள். 27.7.2020-ன்படி பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டு, மாணக்கர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
இளநிலை ஒன்று முதல் ஐந்து பருவங்கள் வரை மற்றும் முதுநிலை ஒன்று முதல் மூன்று பருவங்கள் வரை தவறிய பாடங்களுக்கான மாணக்கர்களின் தேர்வு முடிவுகள் அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க பின்னர் அறிவிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு Phone: 0462-2333741 Mobile: 9487999687 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு பல்கலை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.