தென்காசியில் பெண்ணைக் கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை
1 min read
Woman tied up in Tenkasi and robbed of 100 jewelery
7-9-2020
தென்காசியில் பட்டப்பகலில் பெண்ணைக் கட்டிப்போட்டு 100 பவுன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மரக்கடை அதிபர்
தென்காசி சம்பாத் தெருவில் மரக்கடை அதிபர் ஜெயபால் (வயது60) என்பவரது வீடு உள்ளது. இன்று(திங்கட்கிழமை) ஜெயபால் தூத்துக்குடி சென்று விட்டார். வீட்டில் ஜெயபாலின் மனைவி விஜயலட்சுமி (57) மட்டும் இருந்தார்.
அந்த வீட்டில் பிற்பகல் ஹாலிங் பெல் அடித்தது. அதைக்கேட்டு விஜயலட்சுமி கதவை திறந்தார்.
அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 2 மர்ம மனிதர்கள் திடீரென்று விஜயலட்சுமியை வீட்டிற்குள் தள்ளி கதவை அடைத்தனர். பின்னர் ஒரு கயிற்றால் விஜயலட்சுமியை கட்டிப் போட்டனர்.
கொள்ளை
அதன்பின் அந்த 2 பேரும் விஜயலட்சுமியை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க நகையை பறித்தனர். அதன்பின் சாவியை மிரட்டி வாங்கி அங்கிருந்த பீரோவைத் திறந்து உள்ளே இருந்த சுமார் 80 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.
பின்னர் கதவை திறந்து கொள்ளையடித்த நகை, பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த வேலைக்காரர் விஜயலட்சுமி கட்டிப் போடப் பட்டிருப்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை பற்றி தென்காசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தென்காசி சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவன், முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தென்காவி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.