June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவர் தற்கொலை- ஒரே நாளில் 3 பேர் இறந்த பரிதாபம்

1 min read

Another student commits suicide for fear of NEET exam- 3 people die in one day

13-9-2020

நீட் தேர்வுக்குப் பயந்து மேலும் ஒரு மாணவர் திருச்செங்கோட்டில்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஒரே நாளில் தேர்வு பயத்தில் 3 பேர் இறந்துள்ளனர்.

நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வை எழுத பயந்து ஒரே நாளில் ஒரு மாணவியும் 2 மாணவர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
3-வது சம்பவத்தில் தற்கொலை செய்த மாணவர் பெயர் மோதிலால்(வயது 21). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் முருகன்(51) மின்சார உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். இவருக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன்தான் மோதிலால். இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் தேர்ச்சி அடையவில்லை. தற்போது மூன்றாவது முறையாக எழுத பயிற்சி எடுத்தார்.

நேற்று(சனிக்கிழமை) மாலை நீட் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஹால்டிக்கெட், பேனா, முகக்கவசம் உள்பட அனைத்து பொருட்களையும் எடுத்து தயாராக வைத்திருந்தார். பின்னர் தனி அறையில் படித்துக் கொண்டிருந்தார்.

தூக்குப்போட்டு…

இரவு 8-30 மணி அளவில் மோதிலாலை சாப்பிட அழைத்தனர். ஆனால் அவரது அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் பயந்துபோய் அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கே அவர் மின் விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை க் கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்துகிறார்கள். அந்த மாணவர் தற்கொலை செய்யும் முன் கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடித விவரம் உடனடியாக தெரியவில்லை.

ஆதித்யா

முன்னதாக நேற்று மதியம் தற்கொலை செய்த மாணவர் பெயர் ஆதித்யா(வயது 20). தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவைச் சேர்ந்த, மணிவண்ணன் என்பவரின் மகன்.
ஆதித்யா இந்த வருடம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்திருந்தார். இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் இரண்டாவது முறை தேர்வு எழுத தயாராகி வந்தார்.
ஆதித்யாவின் தந்தை பழைய டிராக்டரை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர்களது பூர்வீக ஊர் சேலம் அருகே பூசாரிப்பட்டி. நேற்று ஆதித்யாவின் தந்தை மணிவண்ணனும் தாய் ஜெயசித்ராவும் சொந்த ஊருக்கு விவசாய நிலத்தை பார்க்கச் சென்று விட்டனர். ஆதித்யாவுக்கு தேர்வு மையம் சேலத்தில் போடப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையத்தை பார்த்து வரும்படி தந்தையிடன் ஆதித்யா கூறியுள்ளார்.
மாலை, 6:30 மணிக்கு பெற்றோர் வீடு திரும்பியபோது, ஆதித்யா துாக்கில் சடலமாக தொங்கியதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். ஆதித்யா நீட தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆதித்யா அந்த வீட்டில் ஒரே மகன் என்று கூறப்படுகிறது.

மதுரை மாணவி

நேற்று காலை மதுரையில் ஒரு மாணவி நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்க்கா(19) . இவரது தந்தை முருகசுந்தரம். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன்குடியிருப்பில் வசித்து வருகிறார். ஜோதி ஸ்ரீதுர்கா கடந்த ஆண்டு, ‘நீட்’ தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால், மருத்துவ படிப்பு கனவு நிறைவேறவில்லை.

எனவே இப்போது 2-வது முறையாக எழுத விண்ணப்பித்து இருந்தார். இன்று தேர்வு நடக்க உள்ள நிலையில், நேற்று அதிகாலை, 1 மணி வரை படிக்கப் போவதாக கூறி அறைக்குள் சென்றார். ஆனால் அதிகாலை 4 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடிதம்

அவர் தற்கொலை செய்யும் முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், “உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால், பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில்தோல்வி அடைந்துவிட்டால், அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பேன். இது, யாருடையதவறும் இல்லை.என் மேல், நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கா விட்டால், உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகி இருக்கும்.” என்று எழுதி இருந்தார்.

மேலும் அவர் தற்கொலைக்கு முன்பு ஆடியோவிலும் பேசியுள்ளார். அதில் , “யார், யாரையும் குற்றம் சாட்டாதீங்க. யாருடைய தப்பும் இல்லை. என்னதான் நான் படிச்சாலும் பயமா இருக்கு. பெயிலாகி விடுவேனோன்னு பயமா இருக்கு.’ஒருவேளை, ‘சீட்’ கிடைக்கலைன்னா நீங்க எல்லாரும் ஏமாந்திடுவீங்க. ஸாரி அப்பா, ஸாரி அம்மா. டாட்டா. நீங்க சோகமா இருக்காதீங்க. தம்பி ஸ்ரீதர் இருக்கான். அவனோட எதிர்காலத்திற்காக நீங்க சோகமா இருக்கக்கூடாது. அவனை நல்லா படிக்க வையுங்க. பைடா ஸ்ரீதர். ஐம் ஸாரி. ‘ஐ லவ் யூ. ஸாரி அப்பா. ப்ளீஸ்… உங்க ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னை பற்றி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐம் ஸாரி” என உருக்கமாக பேசியுள்ளார்.

ஒரே நாளில் நீட் தேர்வுக்கு பயந்து 3 பேர் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.