ஐகோர்ட்டு பணிகளை தமிழிலும் வெளியிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
1 min read
The work of the iCourt should be published in Tamil too- Supreme Court advice
18-9-2020
“சென்னை ஐகோர்டு தனது பணிகளை ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழிலிலும் வெளியிட வேண்டும்” என்று, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.
மின்னணு முறை
தற்போதுகொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணைகள், சம்மன்கள் அனுப்புவது போன்றவை அனைத்தும் மின்னணு முறையில் நடைபெறுகின்றன. இப்பணிகளை சிறப்பாக நடத்த, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளை தலைவராக கொண்ட மின்னணு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு மின்னணு குழுவின் தலைவராக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இருக்கிறார். அவர் நீதிமன்ற இணையதளத்தை 22 தேசிய மொழிகளில் மொழியாக்கம் செய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அவர், தமிழகத்தில் 5 மின்னணு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
கோர்ட்டு நோட்டீஸ் மற்றும் சம்மன்களை ஸ்மார்ட்போன்கள் மூலம் அனுப்புவது, அரசு இ-சேவை மையங்கள் மூலம் இ-கோர்ட் சேவைகளை வழங்குவது, மாவட்ட நீதிமன்ற ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை ஆகியவை இதில் அடங்கும்.
தமிழகம்
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:- இ-கோர்ட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்தி நாட்டிற்கு தமிழகம் வழிகாட்டுவதாக உள்ளது. சென்னை இ-கோர்ட்டு குழுவின் தலைவர்களான, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். சென்னை ஐகோர்ட் தனது பணிகளை ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல் மக்கள் பயன்பெற தமிழிலிலும் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி சிவஞானம் பேசுகையில், ”தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் மார்ச் 26 முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பதிவான 1,83,224 வழக்குகளில், 1,29,068 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக மின் ஆளுகை நிறுவனம் மூலம் தற்போது 12,649 இ-சேவை மையங்கள் மூலமாகவும் இ-கோர்ட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன. அங்கும் இனி வழக்கு தாக்கல், காணொளி மூலம் சாட்சிகள் ஆஜராவது நடக்கும்,” என்றார்.