சென்னையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை
1 min read
orona vaccine test in Chennai
29/9/2020
ஆக்ஸ்போர்ட் பல்கலை தயாரித்துள்ள, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசி பரிசோதனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல நாடுகள் மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில், ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்த, ‘கோவாக்சின்’ தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள, கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை, இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, ‘சீரம்’ நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசியை, ‘ஆஸ்ட்ரா ஜெனகா’ நிறுவனம் தயாரிக்க உள்ளது.கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கி உள்ளது.
ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி
அதன்படி, 17 நகரங்களில், 1,600 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது.சென்னையில், ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக, 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இரண்டு தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனை நேற்று தொடங்கியது. அதேபோல, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளது.