தேர்வு எழுதாமல் தேர்ச்சியை மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- ஐகோர்ட்டு கேள்வி
1 min read
How can students expect proficiency without writing the exam? – high Court question
7/10/2020
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
கல்லூரி தேர்வு
தமிழகத்தில் பொறியியல், கலை அறிவியல், எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கல்லூரி இறுதி செம்ஸ்டர் தேர்வு மட்டும் எழுதவணே்டும் என்றும் கூறியது.
இந்த நிலையில் தேர்வு எழுதாமல் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஏ.ஐ.சி.டி.இ. தாக்கல் செய்த பதில் மனுவில், “தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை விதிகளுக்கு முரணானது” என தெரிவித்திருந்தது.
நீதிபதி கேள்வி
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கூறியதாவது:- தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம். அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ.க்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அரியர் தேர்வு ரத்துக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும். ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பி.இ. படித்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர்.
இந்த வழக்கில் நவம்பர் 20-ந் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் யு.ஜி.சி. பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.